Skip to main content

Maatram

சுமந்திரன் கூறியது தவறு; புதிய கட்சிகளை இணைப்பதில்லையென முடிவெடுக்கப்படவில்லை: கே.வி.தவராசா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழரசு கட்சியின் கொழுப்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மறுத்துள்ளார்.

தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் நடந்த விவகாரங்களை அவர் தெளிவுபடுத்திய போது, “அவ்வாறான ஒரு தீர்மானம் தமிழரசு கட்சியின் அரசியல் குழுவில் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அரசியல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டஅரசியல் குழு உறுப்பினர்கள் சகலரும் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தார்கள், இறுதியில் இறுதி தீர்மானத்தை தை மாதம்7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற உள்ள மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதாகவும் அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பதாகவோமே தீர்மானிக்கப்பட்டது.

எந்த சூழ்நிலையிலும் மற்றைய தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் கூட்டணியாக உள்வாங்குவதில்லை என்ற முடிவு, சூம்முறையில் நடத்தப்பட்ட அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.

சூம் முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்து பதினைந்து நிமிடங்களில் தனக்கு வேறு ஒரு கூட்டம் உள்ளதாக கூறி வேறு ஒரு கூட்டத்திற்கு சென்று விட்டார். இறுதிவரை அவர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை. உண்மைக்கு புறம்பான ஒரு அறிக்கையை பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்திருப்பது கவலையினமும் கவலைக்குரியதும் ஆகும் என்பதை பொறுப்போடு கூறிக்கொள்கின்றேன்“ என்றார்.