Skip to main content

Maatram

இன்னும் சுயாட்சி கிடைக்காத பகுதியாக தமிழர் பகுதியை பிரகடனப்படுத்துங்கள்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் எம்.பி!

தமிழர் தேசமான ஈழத்தினை , சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம்  என  ஐ.நா.மனித உரிமை பேரவையின் 52 ஆவது அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தெரிவித்துள்ளார்.

அவரது உரையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த அறிக்கையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது. சிறிலங்காவின் நீதிமன்ற கட்டளையினை மீறி, தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர் மலையானது அழிக்கப்பட்டு அங்கு ஒரு பெளத்த விகாரை கட்டப்பட்டிருக்கிறது .

இப்படியாக தமிழர் தாயகமெங்கிலும், குறிப்பாக சிங்களவர்கள்/ பெளத்தர்கள் இயல்பாக குடியிருக்காத பகுதிகளில் கூட, பெளத்த மத ஆலயங்கள் சிறிலங்கா அரச இயந்திரத்தின் துணையுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. நாயாறு, தையிட்டி , நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமளங்குளம், கன்னியா வெந்நீரூற்று என்பன, இவ்வாறு தமிழர் தாயக நிலத்தில் பெளத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுவரும் சில இடங்களாகும்.

இவற்றுள் பெரும்பாலனவை சிறிலங்கா அரச ஆதரவோடு , தமது அரசின் நீதிமன்ற கட்டளைகளை தாமே மதிக்காது, உதாசீனப்படுத்தி, கட்டமைக்கப்பட்டுவரும் ஆலயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு – சில இடங்களில் . இந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்களை சூழ இருக்கும் பகுதிகளில் , தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் முனைப்போடு, சிறிலங்கா அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்ற திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தமிழர்கள் காலங்காலமாக 300,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, அங்கு சட்டவிரோதமான முறையில் சிறிலங்கா அரச ஆதரவோடு சோளப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் சிங்களவர்களால், தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர். உண்மையில் இந்த தமிழர்களின் பாரம்பரிய – புராதன அடையாள நிலமானது, சிங்கள பெளத்தமயமாக்கலுக்கான பகுதியாக சிறிலங்கா அரசினால் குறிவைக்கப்பட்டு, அங்கு இனப்பரம்பல் மாற்றப்பட்டு வருகிறது .

‘மாதுரு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டம்” எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது – அந்தபகுதியில் இருக்கும் தமிழர்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சிங்களவர்களை குடியேற்றி இனப்பரம்பலை மாற்றவே சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகிறது . புராதன தமிழ் சைவ வழிப்பாட்டிடமான வெடுக்குநாறி மலையினை பெளத்த புராதன பிரதேசமாக மாற்றியமைத்து பிரகடனப்படுத்தும் நோக்குடன் , அப்பகுதியை சிறிலங்கா அரசின் தொல்பொருட்திணைக்களம் கையகப்படுத்தியிருக்கிறது.

கனம் அவைத்தலைவர் அவர்களே,

ஆயுத மோதல் முடிவிற்று 13 ஆணடுகள் கடந்த நிலையிலும் , நடைமுறையில் – தமிழர்கள் மீது, சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட கலாசார இனவழிப்பும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

ஆகவே ,


– சிறிலங்காவிற்கு ஐ.நா.வின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும்


– சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்குமாறும்


– தமிழர் தேசமான ஈழத்தினை , சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.